இந்த வலையில் தேடவும்

Sunday, April 24, 2011

கலைடாஸ்கோப்-15

லைடாஸ்கோப்-15 உங்களை வரவேற்கிறது

பேச்சும் எழுத்தும்
=================

நன்றாக எழுதுகிறீர்கள் என்று சில பேர் சொல்கிறார்கள். நன்றி.. ஏதோ ஓரளவு எழுத வருமே தவிர பேசச் சொன்னால் சரளமாக நாலு வார்த்தைக்கு மேல் பேச வராது.பேசுவதும் எழுதுவதும் மூளையின் வேறு வேறு 'டிபார்ட்மென்ட்' போலத் தெரிகிறது. மிகப் பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் மேடையில் பேசுவதற்குத் தயக்கம் காட்டியிருக்கிறார்கள் and vice versa
அது எப்படி? எதை பேச நினைக்கிறோமோ அதை எழுதி விடலாமே, எதை எழுத நினைக்கிறோமோ அதை அப்படியே பேசி விடலாமே என்று நீங்கள் கேட்கலாம்..but it is not that simple !
பேச வராததால் வாழ்க்கையில் நிறைய வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். 'சரியாப் பேசவே வரலை நீயெல்லாம் வாழ்க்கையில் எப்படி முன்னுக்கு வரப்போகிறாய்?' என்று முகத்துக்கு நேராகவே சில பேர் கேட்டிருக்கிறார்கள். 'இன்டர்வியூ' போகும் போது என்னை விட அம்மா தான் அதிகம் டென்ஷன் ஆவாள்..நான் ஐந்து மணிக்கு எழுந்தால் அம்மா நாலரை மணிக்கே எழுந்து கொள்வாள்..

சரக்கு நல்லதாக இருந்து என்ன செய்ய? சந்தையில் வாய் சாதுரியம் காட்டினால் தானே அது விற்பனை ஆகும்? :(

'குரல் இல்லாதவனுக்கு விரல்' என்று சங்கீதத்தில் சொல்வார்கள்.அதாவது பாடுவதற்கு நல்ல சாரீரம் வாய்க்காவிட்டால் வயலின், புல்லாங்குழல்,வீணை என்று வாத்தியம் இருக்கவே இருக்கிறது.'
குரல் இல்லாதவனுக்கு விரல்' என்பது இங்கேயும் பொருந்தும்..

நன்றாக எழுதுவது என்பது ஒரு balancing effect அவ்வளவு தான்.கண் தெரியாதவர்களுக்கு காது கூர்மையாக இருக்கும் என்பார்களே..அது மாதிரி..பதிவர் சந்திப்பு ஏதாவது வைத்தால் 'இப்போது சமுத்ரா அவர்களைப் பேருரை ஆற்ற அழைக்கிறோம்' என்று யாராவது அழைத்து விடாதீர்கள் ஆமாம்..

ஒரு ஆங்கிலப் பழமொழி நினைவுக்கு வருகிறது " நீங்கள் நாலு பேர் மத்தியில் வாயைத் திறக்காமல் இருந்தால் அவர்கள் உங்களை ஒரு முட்டாள் என்று நினைக்கக் கூடும்..வாயைத் திறந்து விட்டால் நீங்கள் அதை நிரூபித்து விடுவீர்கள்"

Hard Engineers
==================

பெங்களூருவில் சாப்ட்வேர் கம்பெனிகளின் தொட்டில் என்றால் அது 'எலக்ட்ரானிக் சிட்டி' தான் என்று இருந்தது. (அல்லாரும் ஆபீஸ்ல தூங்குனா 'தொட்டில்'ன்னு தானே சொல்லணும்?) இப்போது வெவ்வேறு இடங்களில் 'டெக் பார்க்குகள்' வந்து விட்டன.EC புராதனமானது என்பதால் அதற்கு இருக்கும் அழகு இப்போது புதிதாக முளைத்த டெக் பார்க்குகளுக்கு இல்லை..மான்யதா IBM டெக் பார்க்கில் வெய்யில் வாட்டி எடுக்கிறது. அங்கே ஒரு கம்பெனியில்
'இன்டர்வியூ' இருந்தது. ('இன்டர்வியூ' பாஸ் ஆகாதது ஏன் என்று அறிந்து கொள்ள முந்தைய பகுதியைப் படிக்கவும்)

எல்லா கட்டிடங்களும் ஒரே மாதிரி இருந்து பயமுறுத்தியதால் யாரையாவது அந்த கம்பெனி எங்கே இருக்கிறது என்று கேட்கலாம் என்று முடிவெடுத்தேன். கொடுமை என்னவென்றால் அங்கே நடந்து வந்தவர்களில் முக்கால்வாசிப்பேர் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு காதுக்கு இயர் போன் மாட்டிக் கொண்டு குடையில் தங்களை மறைத்துக் கொண்டு 'எங்களுக்கும் வெளி உலகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்ற லெவலுக்கு இருந்தார்கள். இப்படியே நிறைய பேர் வந்து கொண்டிருந்ததால் கடுப்பாகி ஒரு முடிவுடன் ஒரு 'குடை + கூலிங் கிளாஸ் + இயர்போன்' யுவதியை அணுகி வழி கேட்டேன்..அதற்கு அவர் வேண்டா வெறுப்பாக காதில் இருந்து இயர்போனை கர்ணன் குண்டலத்தைப் பறித்த மாதிரி அலட்டிக் கொண்டு உருவி Yes ?? என்றார்..நான் வழி கேட்டதும் தெரியாது என்று தலையை ஆட்டினார்..கடைசியில் அதே கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு 'எலக்ட்ரீஷியன்' ஆபத்பாந்தவனாய் எனக்கு வழிகாட்டி ரிஷப்ஷன் வரை அழைத்துச் சென்று விட்டு உதவினார்.

வருடத்திருக்கு பத்து லட்சம் பதினைந்து லட்சம் சம்பாதிப்பதாலோ என்னவோ தாங்கள் எல்லாருக்கும் ஒரு படி மேல் ( or at least different from others !) என்று அவர்கள் நினைக்கிறார்கள் போல..
software engineers எல்லாம் Hard engineers ஆக மாறிக் கொண்டிருக்கிறார்கள். நான் IT க்கு வந்ததை வாழ்வின் தவறுகளில் ஒன்றாக நினைக்கிறேன். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் no IT ..மழை ஓய்ந்த சாயங்கால நேரம் ஒன்றில் , சிற்றூர் ஒன்றில், பள்ளி முடிந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பும் போது பிள்ளைகளுக்கு மிக்சர் வாங்கிப் போகும் வாத்தியாராகப் பிறக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன்


கபீர் கே தோஹே
=================

அக்கா ஹிந்தி படித்துக் கொண்டிருந்த போது
கபீர் கே தோஹே விழுந்து விழுந்து மனப்பாடம் செய்வாள். நீயும் ஹிந்தி படி பிற்காலத்தில் உபயோகம் ஆகும் என்று சொல்வாள்..ஹிந்தி கற்றுக் கொள்ள மிகவும் எளிது என்றாலும் ஏனோ கற்றுக் கொள்ளவில்லை. வேடிக்கை என்ன என்றால் ஹிந்தி ஆறு பரீட்சை பாஸ் செய்த அவள் எங்களுக்கு மூன்றாம் வீட்டிலேயே கல்யாணம் ஆகி செட்டில் ஆகி விட்டாள்..நான் தான் புனே எல்லாம் சென்று யாராவது மணி என்ன என்று கேட்டால் அசடு வழிந்து அவருக்கு வாட்சைக் காட்ட வேண்டியிருந்தது.

ஏன் சொல்கிறேன் என்றால் கவிர்கள் ,ஞானிகள் ,இலக்கியவாதிகள் இவர்கள் எல்லாம் உயிரைக் கொடுத்து தங்களை அர்ப்பணித்து எழுதியதை, அவர்களின் பரவச அனுபவத்தில் விளைந்த கவிதைகளை, பாடல்களை, அவர்களின் ஜீவானுபவத்தை, நாம் இன்று ரெண்டு மார்க் , ஐந்து மார்க் கேள்விகளாக தரம் தாழ்த்தி விட்டோம் என்பது ஒரு வருந்தத்தக்க விஷயம்.

தேரா மன்னா என்று விளித்து 'வாயிற் கடைமணி நாடு நா நடுங்க ' என்று எழுதிய போது இளங்கோவடிகளுக்கு உண்மையிலேயே நடுநா துடித்திருக்கும்.ஆனால் அதுவே மனப்பாடச் செய்யுளாக வரும்போது இன்று எத்தனை மாணவர்களுக்கு அந்த ஒரிஜினல் பரவசத்தின் ஒரு கீற்றாவது வந்து போகும் என்று தெரியவில்லை (நடுநா எல்லாம் நடுங்காவிட்டாலும் பரவாயில்லை)

சரி இப்போது கபீரின் ஒரு தோஹெ பார்க்கலாம்

கால் கரே ஸோ ஆஜ் கர், ஆஜ் கரே ஸோ அப்
பல் மே பிரளய் ஹோயேகி பஹூரி கரோகே கப்

தமிழில்:

நாளை செய்யவிருப்பதை இன்று செய்; இன்று செய்வதை இப்போ
பேரழிவு எப்போது
ம் வரலாம்..நீ நற்செயல் செய்வது எப்போ ?

நம் ஆட்கள் தான் தப்பர்த்தம் செய்து கொள்வதில் கில்லாடிகள் ஆயிற்றே ? ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது: ஒரு ஆபீசில் மானேஜர் தன் துணை மானேஜரைப் பார்த்துக் கேட்கிறார்: "நாளை செய்ய நினைப்பதை இன்றே செய்யுங்கள்" என்று ஆபீசில் எழுதி வைக்கச் சொன்னேனே? ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா? என்று

துணை மானேஜர் சொன்னார் : "ஆம் நல்ல பலன்..தலைமை குமாஸ்தா டைப்பிஸ்டை இழுத்துக் கொண்டு ஓடி விட்டார்..காசியர் பத்தாயிரம் பணத்துடன் தலைமறைவாகி விட்டார் ..ஐந்து பேர் வேலையை ராஜினாமா செய்து விட்டார்கள்!"

ஒரு கவிதை
===========

(கல்லூரி மாணவியின் ஆட்டோக்ராப் புத்தகத்தில் இருந்து)

இமைகள் பிரிந்தால்
காட்சி உருவாகிறது
உதடுகள் பிரிந்தால்
வார்த்தை உருவாகிறது
கரைகள் பிரிந்தால்
நதி உருவாகிறது
பாதைகள் பிரிந்தால்
பயணம் உருவாகிறது
நம்
இருவரின்
பிரிவில் மட்டும் ஏன் ஒரு
நரகம் உருவாகிறது?

மேலே சொன்னது சுடாத கவிதை..இப்போது ஒரு சுட்ட கவிதை
===================================================

உன் கவிதையை நீ எழுது

எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி

எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி

நீ அர்ப்பணித்துக் கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது

உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது

சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது

நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது

எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது

எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்

தத்தளிப்பைப் பற்றி எழுது

எழுது உன் கவிதையை நீ எழுது

அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்

ஒன்று செய்

உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று

என்னைக் கேட்காமலேனும் இரு.


By பசுவையா (or ) பசவய்யா..

(இதைப் படித்ததும் இந்தக் கவிதை எனக்கு ஏன் தோன்ற வில்லை என்று கேட்கத் தோன்றுகிறது. பசு(ச)வையா..Law of reverse effects ! )

ஓஷோ ஜோக் இல்லாத கலைடாஸ்கோப்பா? இப்போது ஒரு ஓஷோ ஜோக்

ஓஷோ ஜோக்
=============

கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த மாணவ மாணவியர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் பிரின்சிபால் பேசினார்

"இந்த ஒரு விஷயத்தை மாத்திரம் எல்லாரும் நன்றாக நினையில் வையுங்கள்..மாணவியர்களின் ஹாஸ்டலில் பையன்கள் யாரும் நுழையக் கூடாது..மாணவர்கள் ஹாஸ்டலில் பெண்களும் நுழையக் கூடாது.இந்த விதியை யாராவது மீறியது தெரிந்தால் அவர்களுக்கு முன்னூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும் ..இரண்டாவது முறை விதியை மீறினால் ஐநூறு ரூபாய் அபராதம்..அதே ஆள் மூன்றாவது முறையும் பிடிக்கப்பட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம்...புரிந்ததா ?" என்றார் கடுமையாக

அப்போது ஹாலின் பின் பக்கத்தில் இருந்து ஒரு குரல்
கேட்டது "சார், சீசன் பாஸ் ஏதாச்சும் இருக்குதுங்களா?"


முத்ரா


16 comments:

சேலம் தேவா said...

//மழை ஓய்ந்த சாயங்கால நேரம் ஒன்றில் , சிற்றூர் ஒன்றில், பள்ளி முடிந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பும் போது பிள்ளைகளுக்கு மிக்சர் வாங்கிப் போகும் வாத்தியாராகப் பிறக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன்//

நல்ல கற்பனை..!! :)

பொன் மாலை பொழுது said...

// " நீங்கள் நாலு பேர் மத்தியில் வாயைத் திறக்காமல் இருந்தால் அவர்கள் உங்களை ஒரு முட்டாள் என்று நினைக்கக் கூடும்..வாயைத் திறந்து விட்டால் நீங்கள் அதை நிரூபித்து விடுவீர்கள்"//

மிகவும் ரசித்தேன்.
"கலைடாஸ்கோப் " அனைவரும் வாசித்து அனுபவிக்க வேண்டிய ஒன்றுதான்.

இராஜராஜேஸ்வரி said...

சரக்கு நல்லதாக இருந்து என்ன செய்ய? சந்தையில் வாய் சாதுரியம் காட்டினால் தானே அது விற்பனை ஆகும்? :(//
உண்மையான வார்த்தைகள்.
எல்லாப் பகுதிகளும் அருமையாக சிந்திக்க வைக்கும்படியாக இருக்கிறது. பகிர்வுக்குப் பாராட்ட்க்கள்.

ஷர்புதீன் said...

//" நீங்கள் நாலு பேர் மத்தியில் வாயைத் திறக்காமல் இருந்தால் அவர்கள் உங்களை ஒரு முட்டாள் என்று நினைக்கக் கூடும்..வாயைத் திறந்து விட்டால் நீங்கள் அதை நிரூபித்து விடுவீர்கள்"//

இததான் நான் அடிகடி சொல்லுவது ., பழமொழிகள் எல்லோருடைய சவ்கரியத்திர்க்கும் இருக்கு, உபயோகபடுத்த தெரிந்தால் போது!



//பேச வராததால் வாழ்க்கையில் நிறைய வாய்ப்புகளை இழந்திருக்கிறேன்.//

நான் உங்களிடம் பலமுறை பேசி இருக்கிறேன் என்றவகையில் இதனை ஒத்துகொள்கிறேன், பேசியவர்களெல்லாம் கிழித்துவிட்டார்கள் என்றால், நானெல்லாம் பல ஆயிரம் பக்கங்களை கிழித்து இருக்கவேண்டும், இன்னும் ரெண்டு பக்கம் கூட கிழிக்கும் அளாவிற்கு வளரவில்லை, அது என் தப்புதானே தவிர , மற்றவர்களின் /மற்றதுகளின் தப்பில்லை என்பதை மட்டும் ஏற்றுகொள்கிறேன்!

Mohamed Faaique said...

.////சிற்றூர் ஒன்றில், பள்ளி முடிந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பும் போது பிள்ளைகளுக்கு மிக்சர் வாங்கிப் போகும் வாத்தியாராகப் பிறக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன்///
என் ஆசையும் இதுதான் நன்பா... ஆசிரியர் தொழில் கிடைத்தும் உதரி விட்டு, கட்டிட துரையில் வந்ததால், இன்று சொந்த பந்தங்களை இழந்து மத்திய கிழக்கில் காய்ந்து கொண்டிருக்கிறேன்.

உங்களுக்கு எழுதவாலும் வருது.. எனக்கு கற்பனையில் மாத்திரம்தான் வருது.. எழுதவும் முடியல...

நல்ல ஆய்வு.. நல்ல பதிவு...

Katz said...

gud post...

Unknown said...

ஒரு மெல்லிய சங்கீதம் போல இயல்பாக இருக்குறது உங்கள் எழுத்து நடை, வாசித்தேன், ரசித்தேன்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

எல்லோருக்கும் ஒன்று பிடித்தது போல எப்போதுமே எழுதுவது மிகக் கடினமான விஷயம்.

உங்களால் அது முடிகிறது சமுத்ரா அடிக்கடி.

Unknown said...

எல்லாமே கலக்கல் பாஸ்!
நம்மளுக்கும் கூட்டத்தைக் கண்டாலே பேச வராது!
அதுக்காக எழுத மட்டும் வரும்னு சொல்லலை! :-)

Sugumarje said...

:) நன்று

ஆனந்தி.. said...

as usual superb..
சமுத்ரா...உங்க பின்னூட்டங்கள் கூட ரொம்ப சின்னதா தான் நான் பார்த்து இருக்கேன்..அப்பவே ஞான் அறியும் :)) ரொம்ப கம்மியா பேசுவீங்கன்னு...ஹ ஹ....

//மழை ஓய்ந்த சாயங்கால நேரம் ஒன்றில் , சிற்றூர் ஒன்றில், பள்ளி முடிந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பும் போது பிள்ளைகளுக்கு மிக்சர் வாங்கிப் போகும் வாத்தியாராகப் பிறக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன்//
ஸோ cute வரிகள்...இது தான் சமுத்ரா உங்களின் அழகான ஸ்டைல்ன்னு சொல்றேன்...

Nagasubramanian said...

nice post!

KaRa said...

//அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் no IT ..மழை ஓய்ந்த சாயங்கால நேரம் ஒன்றில் , சிற்றூர் ஒன்றில், பள்ளி முடிந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பும் போது பிள்ளைகளுக்கு மிக்சர் வாங்கிப் போகும் வாத்தியாராகப் பிறக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன்//

இதை நான் வழிமொழிகிறேன்

Kumky said...

வெகு சுவாரஸ்யம்...

இன்றுதான் படித்தேன்...

தொடர்கிறேன்...நன்றி.

பூமி said...

வணக்கம் பாஸ்! நானும் உங்க கேஸ் தான். பேசணும்னாலே நாக்கு தந்தி அடிக்கும். ஆனா இருக்கிற IT துறையில் பேச்சை நம்பித்தான் பிழைக்க வேண்டியிருக்கு. என்ன செய்ய? நம்ம நிலமை கொஞ்சம் கஷ்டம் தான்!

arul said...

பேச வராததால் வாழ்க்கையில் நிறைய வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். 'சரியாப் பேசவே வரலை நீயெல்லாம் வாழ்க்கையில் எப்படி முன்னுக்கு வரப்போகிறாய்?' என்று முகத்துக்கு நேராகவே சில பேர் கேட்டிருக்கிறார்கள்

experiencing this situation most of the time..